திருவெறும்பூர் அருகே பயங்கரம் மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை போலீசார் விசாரணை


திருவெறும்பூர் அருகே பயங்கரம் மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 7:15 PM GMT)

திருவெறும்பூர் அருகே மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பனையகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் ரதீஷ்(வயது 35), கொத்தனார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும், காமேஷ், நாகாத் என்று 2 மகன்களும் உள்ளனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு கீர்த்தனாவிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு ரதீஷ் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று காலை பனையகுறிச்சியில் உள்ள ரேஷன் கடைக்கும், அங்கன்வாடி மையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் மதுபாட்டிலால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரதீஷ் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ரதீஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அப்போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டியின் கீழே ரத்தம் சொட்டியிருந்தது. வழி யிலும் ரத்தம் சொட்டியிருந்தது. இதனால் அந்த வண்டியின் அடியில் வைத்தே ரதீஷை கொலை செய்ய மர்ம நபர்கள் முயன்றிருக்க வேண்டும். மது பாட்டிலால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரதீஷ் தப்பிக்க ஓடியபோது, முடியாமல் கீழே விழுந்து இறந்திருக்க வேண்டும், என்று போலீசார் கருதினர்.

போலீஸ் மோப்ப நாய் ‘ஸ்பார்க்’ சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டது. மோப்ப நாய் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி, ரதீஷ் வீட்டிற்கு போய் நின்றது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரதீஷை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? நள்ளிரவு 1 மணிக்கு மேல் ரதீஷ் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்? அவரை அழைத்தது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story