காரைக்காலில், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


காரைக்காலில், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2019 11:30 PM GMT (Updated: 20 Jan 2019 8:36 PM GMT)

காரைக்காலில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான பார்வதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியை காரைக்கால் நண்டலாறு எல்லையில், அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் பலர் வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மாதம் 11-ந் தேதி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் சுற்று வட்டார கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் 3 நாள் பயணமாக துபாய் சென்றிருந்தேன். அங்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் வட மாநிலங் களை சேர்ந்த தொழில் முனைவோர் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், பொங்கல் விழாவிலும் கலந்து கொண்டேன்.

குறிப்பாக, காரைக்கால், நல்லம்பல், திருமலைராயன்பட்டினம், தமிழகப்பகுதியான நாகூரை சேர்ந்தோர் அதிகம் இருந்தனர். அவர்களிடம், புதுச்சேரி மாநிலத்தில் தொழில் தொடங்கினால் அரசு சார்பில் செய்யப்படும் உதவிகள், சலுகைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினேன். பல முதலீட்டாளர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

குறிப்பாக காரைக்கால், திருமலைராயன்பட்டினம், போலகம் பகுதியில் தொழில் தொடங்குமாறு கேட்டுக் கொண்டேன். இதனால் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக, காரைக்காலில் தொழில் தொடங்குவோர் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தோருக்கு 60 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கினால் தான் சலுகைகள் என அறிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story