கோடியக்கரை சரணாலயத்தில், போதிய உணவு கிடைக்காததால் சீசன் முடிவதற்கு முன்பே சொந்த நாட்டிற்கு திரும்பி சென்ற பறவைகள்


கோடியக்கரை சரணாலயத்தில், போதிய உணவு கிடைக்காததால் சீசன் முடிவதற்கு முன்பே சொந்த நாட்டிற்கு திரும்பி சென்ற பறவைகள்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 9:22 PM GMT)

கோடியக்கரை சரணாலயத்தில் போதிய உணவு கிடைக்காததால், சீசன் முடிவதற்கு முன்பே சொந்த நாட்டிற்கு பறவைகள் திரும்பி சென்றன. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து விட்டது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு உணவிற்காக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான பறவைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்வது வழக்கம்.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக், இலங்கை, ஆஸ்திரேலியா, பர்மா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, சிவப்புகால் உள்ளான், வரித்தலை வாத்து, சிறவி வகைகள், கடல் காகம் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் வருவது வழக்கம். அதேபோல உள்நாட்டு பறவைகளான செங்கால் நாரை மற்றும் பல்வேறு வகையான பறவைகளும் இங்கு வருகின்றன.

இந்த நிலையில் கஜா புயலால் இங்கு நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து விட்டன. புயலுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து கோடியக்கரைக்கு குறைவான அளவில்தான் வெளிநாட்டு பறவைகள் வந்தன. அந்த பறவைகளும் தற்போது போதுமான உணவின்றி தவித்து வருகிறது. ஆதலால் ஒரு சில பறவைகள், சீசன் முடிவதற்கு முன்பே தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்று விட்டன. சரணாலயத்தில் தற்போது இருக்கும் சில பறவைகள், ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் உணவை தேடி அலைகின்றன.

கஜா புயல் பாதிப்பால் இந்த சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் குறைந்து விட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி இந்த சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

புயலால் களையிழந்து காணப்படும் இந்த சரணாலயம் மீண்டும் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கை ஆகும். சம்மந்தப்ட்டவர்கள் கவனிப்பார்களா?

Next Story