சாதி, மதத்தால் மக்களை பிரிப்பவர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு


சாதி, மதத்தால் மக்களை பிரிப்பவர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:32 PM GMT (Updated: 21 Jan 2019 11:32 PM GMT)

சாதி, மதத்தால் மக்களை பிரித்து ஓட்டு வாங்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தோற்று விடுவோம் என்று அஞ்சுகின்ற அ.தி.மு.க. புதுப்புது காரணங்களை கூறி, தேர்தலை நடத்தக்கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்யுமாறு தி.மு.க.வினரிடம் அறிவுறுத்தினார். அதன்படி கிராமம்தோறும் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை குறிப்பெடுத்து, கட்சியின் தலைமைக்கு அனுப்பி வருகிறோம். விரைவில் தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன், பொதுமக்களின் குறைகள் அனைத்தும் உடனே நிவர்த்தி செய்யப்படும்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி எப்போதும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் குரலுக்கு செவிகொடுத்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார். தி.மு.க. என்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு தோள் கொடுக்கும் என்பதை கருணாநிதியின் மகளாக உறுதி கூறுகிறேன்.

இஸ்லாமியர்களை ஒடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும். நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதை வணங்க வேண்டும், எப்படி வணங்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் மீது திணிக்கிறது. இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி கொண்ட கருத்தியல் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த ஆட்சியை நாம் தூக்கி எறியக்கூடிய நாள் வெகு விரைவில் வந்து விடும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை. மாறாக பண மதிப்பிழப்பு செய்ததின் மூலம் மக்களை இன்னலுற செய்தது. புதுடெல்லியில் சென்று போராடிய விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க கூட விரும்பவில்லை. சாதியால், மதத்தால் மக்களை பிரித்து, ஓட்டுகளை பெற நினைப்பவர்களிடம் இருந்து நமது நாட்டையும், தமிழகத்தையும் மீட்டு எடுக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். 

Next Story