கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது


கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 12:23 AM GMT (Updated: 22 Jan 2019 12:23 AM GMT)

கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இடிகரை,

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51). இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீரகேரளம் அண்ணாநகரை சேர்ந்த பத்மநாபன் (42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்று வந்தார். இதனால் சரவணகுமார், பத்மநாபன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியரான கோவில்மேடு சாஸ்திரிவீதியை சேர்ந்த நாகராஜ் (43) ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில் பத்மநாபனுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டது. அதற்கு சரவணகுமார் உதவி செய்து வந்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் சரவணகுமார் கடன் கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.

இதன் காரணமாக சரவணகுமார் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மிரட்டினால் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபனிடம், நாகராஜ் ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதன்படி சரவணகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய பத்மநாபன், ஜி.என்.மில்ஸ் சேரன் நகரை சேர்ந்த நண்பர் விஷ்ணுகுமார்(33) உதவியை நாடினார். அவர் தனது கூட்டாளிகளான பாலன், கணபதியை சேர்ந்த அய்யப்பன், போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சரவணகுமார் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு காரில் வந்த பத்பநாபன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து சரவணகுமாரை வழிமறித்து காரில் ஆனைகட்டிக்கு கடத்தி சென்றனர். அங்கு ஒரு அறையில் வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து நிர்வாணமாக படம் எடுத்ததாக தெரிகிறது.

அதன்பின்னர் அந்த ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று சரவணகுமாரை 6 பேரும் மிரட்டினார்கள். இதனால் பயந்துபோன சரவணகுமார் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது எனக்கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை விடுவித்தனர். அதன் பின்னரும் பத்மநாபன் அடிக்கடி சரவணகுமாரிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்தால் பெண்ணுடன் சேர்த்து எடுக் கப்பட்ட ஆபாச படத்தை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் சரவணகுமார் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 7 மணி அளவில் கருணாநிதி நகர் பகுதியில் சரவணகுமார் சென்ற போது அவரை வழி மறித்து மீண்டும் பணம் கேட்டு பத்மநாபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டினார்கள்.

இதனால் மனமுடைந்த சரவணகுமார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ் பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார், பாலன், கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய 6 பேர் மீது கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் பாலன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story