சிற்றுண்டி, ஓட்டல்களில் பயன்பாடு அதிகரிப்பு: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையால் வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு


சிற்றுண்டி, ஓட்டல்களில் பயன்பாடு அதிகரிப்பு: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையால் வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 6:41 PM GMT)

பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிற்றுண்டி, ஓட்டல்களில் வாழை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது. இரு மடங்கு கூடுதலாக வியாபாரிகள் கேட்பதால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பூதலூர் தாலுகாவில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பூவன் ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலடி, உத்தமநல்லூர், பொன்னாவரை, கல்யாணபுரம், ஊராட்சிபேட்டை, நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 1 லட்சம் ஏக்கர் வாழை சாகுபடி செய்யப் பட்டுள்ளன.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாழைத்தார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் வாழை இலைகளும் இங்கிருந்து அறுவடை செய்து சென்னை, கோவை, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக தினமும் காலை முதல் அறுவடை பணிகள் தொடங்கி மாலையில் இலைகள் கட்டப்பட்டு திருவையாறுக்கு சரக்கு ஆட்டோக்களில் அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். இதேபோல் தஞ்சைக்கும் அனுப்பப்பட்டு தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் பஸ்களில் மட்டும் தினமும் வாழை இலைகள் 1,000 கட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த தடை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

வழக்கமாக ஓட்டல்கள், சிற்றுண்டிகள், உணவு விடுதிகளில் காலை, மாலை நேரங்களில் டிபன்களுக்கு, ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தேனீர் கடை, இனிப்பு கடைகளில் பலகாரங்களை மடித்து கொடுப்பதற்கும் இது போன்ற கவர்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு தடை விதிக்கப்பட்டதால் இதற்கு மாற்றாக தற்போது வாழை இலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாழை இலை பயன்பாடு அதிகரிக்க தொடங்கி விட்டது. முன்பு தினமும் டிபன் 1,000 இலைகளை வாங்கும் வியாபாரிகள் தற்போது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாழை இலைகளை வாங்குகிறார்கள். அதாவது வியாபாரிகள் வழக்கத்தை விட 2 மடங்கு வரை கூடுதலாக இலைகளை கேட்கிறார்கள்.

ஆனால் அந்த அளவிற்கு வாழை இலைகளை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது முழு வாழை இலையில் 8 முதல் 10 துண்டுகளாக டிபன் சாப்பிடும் இலைகளை தயார் செய்தனர். ஒரு இலை ரூ.60 காசு என மொத்தமாக கொள்முதல் செய்து வருகிறார்கள்.

தற்போது பயன்பாடு அதிகமாக இருப்பதாலும், உற்பத்தி குறைவாக இருப்பதாலும் ஆட்கள் கூலி, அதை கட்டி விற்பதற்கு எடுத்துச்செல்லும் செலவும் அதிகரித்துள்ளதால் விலையை 1 இலைக்கு ரூ.80 காசாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு முழு இலை குறைந்தது 6 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் ஒரு இலை ரூ.8-க்கு விற்பனை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story