புனேயில் பயங்கரம் மனைவி, மகள் குத்திக்கொலை வாலிபர் கைது


புனேயில் பயங்கரம் மனைவி, மகள் குத்திக்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 11:21 PM GMT (Updated: 22 Jan 2019 11:21 PM GMT)

புனேயில் மனைவி மற்றும் 2 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே கோண்ட்வா பகுதியை சேர்ந்தவர் ஆயாஸ் சேக்(வயது28). இவரது மனைவி தபசும் சேக்(22). இந்த தம்பதிக்கு 2 வயதில் அலினா என்ற மகள் இருந்தாள். இந்தநிலையில், மனைவியின் நடத்தையில் ஆயாஸ் சேக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதி தினமும் சண்டையிட்டு வந்தார்.

இதனால் வேதனை அடைந்த தபசும் சேக் தனது மகளை அழைத்துக்கொண்டு பந்த் கார்டன் தாடிவாலா ரோடு பகுதியில் வசித்து வரும் தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும் கணவரிடம் இருந்து விவகாரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனால் கோபம் அடைந்த ஆயாஸ் சேக் அடிக்கடி தபசும் சேக்கின் தந்தையின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆயாஸ் சேக், தபசும் சேக்கின் தந்தையின் வீட்டுக்கு வந்தார்.

அப்போது தபசும் சேக் மகள் அலினாவுடன் தனியாக ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த அறைக்குள் சென்ற ஆயாஸ் சேக் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தபசும் சேக்கை சரமாரியாக குத்தினார்.

மேலும் குழந்தை என்று கூட பாராமல் சிறுமி அலினாவையும் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

மேலும் தன்னையும் கத்தியால் குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதற்கிடையே அலறல் சத்தம்கேட்டு தபசும் சேக்கின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். தாய், மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பந்த்கார்டன் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆயாஸ் சேக்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயாஸ் சேக்கை கைது செய்தனர். மனைவி, மகளை வாலிபர் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story