மின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் திடீர் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்


மின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் திடீர் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்
x
தினத்தந்தி 23 Jan 2019 12:10 AM GMT (Updated: 23 Jan 2019 12:10 AM GMT)

மின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

புதுச்சேரி,

புதுவை மின்துறையில் ஆண்டுதோறும் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்று மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நுகர்வோர்கள் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என்று மின்துறை அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் வருவாய்த்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மின்நுகர்வோர்களிடம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 4 சதவீத ஒழுங்குமுறை கூடுதல் கட்டணத்தை 10 சதவீதம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுவை மின்துறை மனு கொடுத்துள்ளது.

இந்த மனு தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கோயல் தலைமை தாங்கினார். உறுப்பினர் நீரஜா மாத்தூர், செயலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் கருத்துகளை கேட்டனர்.

அப்போது புதுவை மின்துறையின் வரவு செலவு குறித்த விவரங்களை கண்காணிப்பு பொறியாளர் ரவி விளக்கி கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு அழைக்கப்பட்டனர். மேலும் இந்த ஆணையம் நீதிமன்றத்துக்கு நிகரானது என்பதால் ஒவ்வொருவராக கருத்துகளை தெரிவிக்கவேண்டும் என்றும் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனியார் இரும்பு தொழிற்சாலையின் பிரதிநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஆணையம் இதுபோல் கண்துடைப்புக்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்திவிட்டு மின்துறை கேட்ட அளவுக்கு கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிப்பதாக கூறினர்.

அவர்கள் ஆணைய தலைவரின் இருக்கை முன்பு அமர்ந்து ஆணையத்துக்கு எதிராக திடீரென கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கிற்கு வெளியே நின்ற போலீசார் உள்ளே நுழைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து தரையில் அமர்ந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களை ஒவ்வொருவராக குண்டுகட்டாக போலீசார் வெளியே தூக்கி சென்றனர். வெளியே சென்றவர்கள் கூட்ட அரங்கின் வாசலில் நின்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.

தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது பேசியவர்களுக்கு தலா 5 நிமிடம் வீதம் வாய்ப்பு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்டு பெருமாள், சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் சங்க தலைவர் வை.பாலா, நாராயணசாமி உள்பட பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் 4 சதவீத ஒழுங்குமுறை கூடுதல் கட்டணத்தை 10 சதவீதமாக உயர்த்துவது மறைமுக கட்டண உயர்வு என்றும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். இதன்பின் கூட்டம் நிறைவு பெற்றது.


Next Story