மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு


மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2019 11:15 PM GMT (Updated: 23 Jan 2019 6:48 PM GMT)

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

நாடு இன்று இருக்கிற நிலை உங்களுக்கு தெரியும். எனவே அதைப்பற்றி அதிகமாக நான் சொல்ல வேண்டியது இல்லை. முக்கியமான ஒரு சில செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மேகதாது அணை பிரச்சினையில் இன்று வந்துள்ள ஒரு செய்தி காவிரி பாசன விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக கர்நாடக அரசு தன்னிச்சையாக ஒரு முழு ஆய்வு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்து இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போதே மத்திய அரசும் அதனை ஏற்று இருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என முறையிட்டு இருக்கிறார்கள்.

கடந்த 15 நாட்களுக்கு முன் மத்திய மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனுமதி வழங்காமல் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டமுடியாது என தெளிவாக கூறி இருக்கிறார். கேரள மாநிலமாக இருந்தாலும் சரி, புதுவை மாநிலமாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களையும் கலந்து தான் இதில் முடிவெடுப்போம் என்று உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதியை எல்லாம் மீறி இப்போது மத்திய அரசு கர்நாடகத்தின் அறிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்று இருக்கிறது.

இந்த செய்தி வெளியான பின்னரும் இதுவரை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் இருப்பது தமிழகத்தை பற்றி, தமிழக மக்களை பற்றி அவருக்கு கிஞ்சிற்றும் கவலை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

தொடக்கத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரமுகர்கள் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் பரணிகுமார் நன்றி கூறினார்.

Next Story