திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பயங்கரம், கழுத்தை அறுத்து பெண் கொலை


திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பயங்கரம், கழுத்தை அறுத்து பெண் கொலை
x
தினத்தந்தி 23 Jan 2019 11:30 PM GMT (Updated: 23 Jan 2019 7:39 PM GMT)

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண், கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் குள்ளனம்பட்டி அருகே உள்ள பர்மா காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், கத்தார் நாட்டில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 37). இவர்களுக்கு ராஜா (13) என்ற மகனும், ராகவி (8) என்ற மகளும் உள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ராஜா 8-ம் வகுப்பும், ராகவி 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பிரபாகரன் வெளிநாட்டில் வசிப்பதால், கலைச்செல்வி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்கள் வீட்டின் மாடியிலும், கீழ் தளத்தில் கலைச்செல்வியின் அண்ணன் கண்ணனின் மனைவி செல்வராணி வசிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு பிரபாகரன் தனது மனைவியிடம் பேசுவதற்காக, செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். பல முறை முயன்றும் கலைச்செல்வி செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரபாகரன், வேலைக்கார பெண்ணிடம் பேசி வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

அதன்பேரில் வேலைக்கார பெண், பிரபாகரனின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. எனவே, அவரும் கலைச்செல்வியின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போதும் கலைச்செல்வி செல்போனை எடுக்காததால், ஜன்னல் வழியாக அவர் உள்ளே எட்டி பார்த்தார். அப்போது கலைச்செல்வி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கலைச்செல்வி கழுத்தை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், கலைச்செல்வி தனது குழந்தைகளை காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பி உள்ளார். மாலை 4 மணிக்கு தான் வேலைக்கார பெண் வருவது வழக்கம். எனவே, கலைச்செல்வி மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட கொலையாளிகள் ஆள்நடமாட்டம் குறைந்த மதிய வேளையில் வீட்டுக்கு வந்து கலைச்செல்வியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க கலைச்செல்வி போராடி இருப்பதால், பல இடங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது. மேலும் வீட்டின் முன்பக்க இரும்பு கதவு பூட்டி இருந்ததால், பின்பக்கம் உள்ள மற்றொரு பாதை வழியாக கொலையாளிகள் வந்துள்ளனர். எனவே, கொலையாளிகள் ஏற்கனவே கலைச்செல்வியின் வீட்டுக்கு வந்து சென்றவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேநேரம் வீட்டில் நகை மற்றும் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. எனவே, முன்விரோதம் அல்லது சொத்து பிரச்சினை காரணமாக கலைச் செல்வி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் போலீஸ் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

Next Story