பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு நண்பருடன் குளித்தபோது பரிதாபம்


பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு நண்பருடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 Jan 2019 10:15 PM GMT (Updated: 24 Jan 2019 4:07 PM GMT)

பவானிசாகர் அருகே நண்பருடன் குளித்தபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பவானிசாகர், 

நாமக்கல் மாவட்டம் வெப்படை நெட்டவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் இறந்துவிட்டார். இவருடைய மகன் ஆனந்த் (வயது 17). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். ஆனந்தும், கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்தும் (18) நண்பர்கள்.

இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை மற்றும் பூங்கா பகுதியை சுற்றிப்பார்க்க நேற்று மதியம் வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆனந்த் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

இதனை கவனித்த ரஞ்சித் மற்றும் கரையோரம் நின்றிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று ஆற்றில் மூழ்கிய ஆனந்தின் உடலை தேடினார்கள். மாலை 5 மணி அளவில் அவர் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஆனந்தின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி ஆற்றில் மூழ்கி இறந்த வாலிபரின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story