திருவள்ளூரில் குடியரசு தின விழா: மாவட்ட கலெக்டர் கொடி ஏற்றினார் 115 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


திருவள்ளூரில் குடியரசு தின விழா: மாவட்ட கலெக்டர் கொடி ஏற்றினார் 115 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:15 PM GMT (Updated: 26 Jan 2019 6:49 PM GMT)

குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூரில் மாவட்ட கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி 115 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 39 லட்சத்து 14 ஆயிரத்து 825 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று 70-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு, திறந்த ஜீப்பில் சென்று போலீஸின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து அவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிழ்களையும் வழங்கி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக மொத்தம் 115 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 39 லட்சத்து 14 ஆயிரத்து 825 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறை அலுவலர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், சப்-கலெக்டர் ரத்னா மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

அதேப்போல திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி செல்வநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் முருகேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சீனிவாசன் தேசியகொடியை ஏற்றி வைத்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், அருள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

குடியரசு தினவிழாவையொட்டி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் தாசில்தார் சுரேஷ் பாபுவும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியும், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கலாதரனும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அதேபோல கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனத்தில் துணை இயக்குனர் முரளிதரனும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசனும் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பத் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுமயில், முன்னாள் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேவராஜ், வக்கீல் சுரேஷ், ஜெகதீசன், ஏழுமலை, மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், சிறப்பு விருந்தினராக ஆவடி கல்வி மாவட்ட அலுவலர் இளம்பரிதி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

திருத்தணியில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் ஆகியவற்றில் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி திருத்தணியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நிதிபதி கபீர், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகதீஸ்வரி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல திருத்தணி முருகன்கோவில் நிர்வாக அலுவலகத்தில் கோவில் தக்கார் ஜெயசங்கர் தேசியகொடி எற்றி வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் சிவாஜி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பவனந்தி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் பாபு, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செங்களா, நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி ஆகியோர் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நிர்வாக மேலாளர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story