குடியரசு தினவிழா: ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


குடியரசு தினவிழா: ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:00 PM GMT (Updated: 26 Jan 2019 8:53 PM GMT)

திண்டுக்கல்லில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியை ஏற்றி வைத்து, ரூ.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெள்ளை புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.

மேலும் திறந்த ஜீப்பில் சென்றபடி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து போலீஸ், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, கலெக்டரின் தனி எழுத்தர் கிருஷ்ணமூர்த்தி உள்பட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 112 பேருக்கும், 13 போலீசாருக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் போலீசார் 66 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார்.

மேலும் வருவாய்த்துறை சார்பில் 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 10 பேருக்கு வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், தையல் எந்திரங்கள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு மானியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தையல் எந்திரம், வேளாண்மைத்துறை சார்பில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற 8 பேருக்கு பரிசுத் தொகை, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 5 பேருக்கு ஊக்கத்தொகை உள்பட மொத்தம் 75 பேருக்கு ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தேசிய ஒருமைப்பாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நாட்டுப்பற்று, இந்திய கலாசாரம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதில் தேவநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, திண்டுக்கல் காந்திஜி அரசு நடுநிலைப்பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித வளானர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை சேர்ந்த 550 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் 5 பள்ளிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி, சப்-கலெக்டர்கள் அருண்ராஜ், ஷேக்அப்துல்ரகுமான் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், மாவட்ட நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி மதுரசேகர், மகளிர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, சார்பு நீதிபதி விஜயகுமார் உள்ளிட்ட நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், நகர்நல அலுவலர் அனிதா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நகரமைப்பு அலுவலர் உதயகுமார், மேலாளர் வில்லியம்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடந்த விழாவில், பொதுமேலாளர் ராஜேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 12 டிரைவர்கள், 11 கண்டக்டர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் உள்பட 28 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் துணை மேலாளர்கள் பாலசுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி மேலாளர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றினர். இதில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் எஸ்.கே.சி. குப்புசாமி தேசிய கொடியை ஏற்றினார். இதில் துணைத் தலைவர்கள் ஜி.சுந்தரராஜன், கே.ஏ.ஆர்.மொகைதீன், செயலாளர் மேடா பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story