ஈரோட்டில் பரிதாபம் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு


ஈரோட்டில் பரிதாபம் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
x
தினத்தந்தி 26 Jan 2019 10:15 PM GMT (Updated: 26 Jan 2019 9:05 PM GMT)

ஈரோட்டில் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு,

ஈரோடு வி.வி.சி.ஆர்.நகர் அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் கவிபிரசாத் (வயது 17). இவர் ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவருடைய தாய், தந்தை இறந்துவிட்டதால் பாட்டியின் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கவிபிரசாத் தனது நண்பர்கள் சிலருடன் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் குளிக்க சென்றார். அங்கு அவர்கள் ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கவிபிரசாத் வாய்க்காலில் மூழ்கினார்.

வாய்க்காலில் மூழ்கிய கவிபிரசாத்தை நண்பர்கள் தேடினார்கள். அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று கவிபிரசாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வாய்க்கால் கரையோரமாக கவிபிரசாத்தின் உடல் மிதந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிபிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story