ஒகேனக்கல்லில் பெண் குத்திக்கொலை தம்பி வெறிச்செயல்


ஒகேனக்கல்லில் பெண் குத்திக்கொலை தம்பி வெறிச்செயல்
x
தினத்தந்தி 27 Jan 2019 11:00 PM GMT (Updated: 27 Jan 2019 2:27 PM GMT)

ஒகேனக்கல்லில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜம்மாள் (வயது 56). இவர் ஒகேனக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜம்மாளுக்கு ஒரு மகள் உள்ளார். ராஜம்மாளின் தம்பி காமராஜ் (52). இவர் ஒகேனக்கல்லில் மசாஜ் செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

ராஜம்மாள் தனக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தை கடந்த மாதம் விற்பனை செய்தார். அதன் மூலம் அவருக்கு ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை கேட்டு காமராஜ், ராஜம்மாளிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அக்காள், தம்பிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று ராஜம்மாளின் வீட்டுக்கு சென்று காமராஜ் மீண்டும் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜம்மாளை கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே காமராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ராஜம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காமராஜை வலைவீசி தேடி வருகின்றனர். பணத்துக்காக சொந்த அக்காளையே தம்பி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story