விழுப்புரத்தில் போலீஸ் ஏட்டு, விஷம் குடித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு


விழுப்புரத்தில் போலீஸ் ஏட்டு, விஷம் குடித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 27 Jan 2019 11:00 PM GMT (Updated: 27 Jan 2019 5:29 PM GMT)

விழுப்புரத்தில் குடும்ப தகராறில் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம், 

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 45). இவர் விழுப்புரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். வேல்முருகன் தன்னுடன் பணியாற்றி வந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த பத்மா(35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். வேல்முருகன் தனது குடும்பத்துடன் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயக்கமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேல்முருகன் நேற்று காலை உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story