லாஸ்பேட்டையில் வீடு புகுந்து பா.ஜ.க. நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை


லாஸ்பேட்டையில் வீடு புகுந்து பா.ஜ.க. நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Jan 2019 10:57 PM GMT (Updated: 27 Jan 2019 10:57 PM GMT)

புதுவை லாஸ்பேட்டையில் பா.ஜ.க. நிர்வாகியை அவருடைய வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி, 

புதுச்சேரி பெத்துசெட்டிபேட் சுப்ரமணியர் கோவில் வீதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). பா.ஜனதா கட்சியில் கூட்டுறவு அணி நிர்வாகியாக உள்ளார். இவர் நேரு வீதியில் சாலையோர துணிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா (30), இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் சசிகுமார் நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் சசிகுமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் காயமடைந்தார்.

அப்போது வீட்டில் இருந்த அவருடைய மனைவி, குழந்தைகள் அலறினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அதைப்பார்த்தவுடன் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சசிகுமார் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க., நிர்வாகி வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story