தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினம்


தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினம்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:30 PM GMT (Updated: 30 Jan 2019 9:10 PM GMT)

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது உருவச்சிலை, உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிந்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநகர தலைவர் பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட பொருளாளர் அந்தோணிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி உருவப்படத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட த.மா.கா தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story