“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு: கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்


“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு: கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 7:34 PM GMT)

திருவையாறு அருகே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவையாறு,

தஞ்சையில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி திருவையாறு அருகே அணைக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதை அறிந்த ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி மடம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக திரண்டு, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆழ்துளை கிணறு அமைய உள்ள இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் அங்கேயே டீ போட்டு குடித்து கோஷங்களை எழுப்பினர். இதில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரி பேச்சுவார்த்தை

இதை அறிந்த தஞ்சை “ஸ்மார்ட் சிட்டி” திட்ட உதவி பொறியாளர் போஸ் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள் சார்பில், உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் கரை ஓரத்தில் அமைந்துள்ளன. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் கொள்ளிடம் ஆற்றின் நிலத்தடி நீரை நம்பி உள்ளோம். ஏற்கனவே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி பொறியாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story