என்.ஜி.ஓ. காலனியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


என்.ஜி.ஓ. காலனியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 9:39 PM GMT)

என்.ஜி.ஓ. காலனியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியில் அரசு அலுவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த காலனியின் மத்திய பகுதியில் 67 சென்ட் இடம் உள்ளது. இங்கு ஆரம்ப சுகாதார துணை நிலையம், சுசீந்திரம் புறக்காவல் நிலையம், 2 மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. மேலும் இங்கிருந்து ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீரும் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் நகராட்சி சார்பில் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி எந்திரம் மூலம் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்று அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குப்பைகளை கொட்டும் போது துர்நாற்றம் ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உருவாகும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நேற்று திடீரென இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், பொக்லைன் எந்திரத்தையும் சிறை பிடித்து பணியை தடுத்து நிறுத்தினார்கள். திடீரென பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும், அதிரடிப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். நாகர்கோவில் நகர சபை என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள், அவரிடம் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி உரம் தயாரிக்கும் போது நோய் பரவும். இங்குள்ள குடிநீரும் மாசுபடும் என்பதால் இந்த திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். சுமார் 2 மணி நேரம் இந்த பரபரப்பு நீடித்தது. பின்னர், நகர சபை அதிகாரி மற்றும் போலீசாரின் சமரசத்தை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story