விவசாயிக்கு விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் தர்ம புரியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கரகூரை சேர்ந்த விவசாயி நரசிம்மன் (வயது 57). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மாரண்டஅள்ளி சந்திப்பு சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நரசிம்மன் படுகாயமடைந்தார். இந்த விபத்து காரணமாக நரசிம்மனுக்கு வலதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இந்தநிலையில் நரசிம்மன் விபத்து இழப்பீடு கோரி தர்மபுரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நரசிம்மனுக்கு ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் விபத்து இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இழப்பீடு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் நரசிம்மன் தரப்பில் கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இழப்பீடு வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் தர்மபுரி பஸ்நிலையத்திற்கு வந்தனர். அங்கு பெங்களூருவிற்கு செல்ல தயாராக நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
Related Tags :
Next Story