போடி அருகே அரசு பஸ் மோதி விபத்து, ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் பலி
போடி அருகே அரசு பஸ்- ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் 2 பேர் பலியானார்கள்.
போடி,
போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் ராஜபிரபு (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் சூர்யா (22). இவர்கள் 2 பேரும் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தனர். இவர்களது நண்பர்கள் லட்சுமணன் (22), தினேஷ் குமார் (22), சரவணன் (22), சித்திரைக்குமார் (23).
இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் கோடாங்கிபட்டியில் நடந்த தங்களது நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் அவர்கள் போடியில் இருந்து கோடாங்கிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை ராஜபிரபு ஓட்டினார். போடி- தேனி சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
அப்போது மதுரையில் இருந்து போடி வழியாக தேவாரம் நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. போடி காளியம்மன் கோவில் அருகே வந்தபோது பஸ்சும், ஆட்டோவும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த ராஜபிரபு, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த மற்ற 4 பேரும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு போலீ சார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் (40) என்பவரை கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து கோடாங்கிபட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story