வேளாங்கண்ணி அருகே குளத்திற்குள், கார் பாய்ந்து 2 பேர் பலி


வேளாங்கண்ணி அருகே குளத்திற்குள், கார் பாய்ந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 10:17 PM GMT)

வேளாங்கண்ணி அருகே குளத்திற்குள், கார் பாய்ந்து 2 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி, 

நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் தினேஷ் என்கிற ராஜேஷ் (வயது 31). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு திரும்பி வந்தார். இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன்(20), குருமூர்த்தி(34), கண்ணன்(40). இவர்கள் 3 பேரும் விவசாயிகள்.

இந்த நிலையில் ராஜேசுக்கு சொந்தமான காரில் எட்டுக்குடியில் இருந்து திருவாய்மூர் நோக்கி இவர்கள் 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜேஷ் ஓட்டினார். திருக்குவளை பைபாஸ் சாலை அருகே கார் வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளத்திற்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களில் சுரேந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ராஜேஷை மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story