திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் மகசூல் குறைந்துள்ளதால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் மகசூல் குறைந்துள்ளதால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2019 11:15 PM GMT (Updated: 1 Feb 2019 10:36 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மகசூல் குறைந்துள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து எக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், வேளாண் பொறியியல் துறையில் அதிகமான எந்திரங்கள் இல்லாததால் தனியார் வாடகை எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

தனியார் எந்திரங்களுக்கு மணிக்கு ரூ.ஆயிரத்து 800 மேல் வாடகை தர வேண்டியுள்ளது. கஜா புயலினால் கதிர் வரும் நிலையில் பாதிப்பு, நோய் தாக்குதலிலும் சிக்கியது. இதனை தொடர்ந்து உரம், மருந்துகள் போன்ற கூடுதல் செலவுகளை கடன் வாங்கி விவசாயிகள் செய்து பயிர்களை பாதுகாத்தனர். இந்த கடன்களை அறுவடையில் கிடைக்கும் மகசூல் லாபத்தில் ஈடுகட்டலாம் என விவசாயிகள் கண்ட கனவு கலைந்து போனது.

கடந்த ஆண்டு ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டைகளுக்கு மேல் மகசூல் கிடைத்தது. ஆனால் தற்போது இயற்கை இடர்பாடு, நோய் தாக்குதலால் ஏக்கருக்கு 20 மூட்டை என்ற விகிதத்தில் மகசூல் கிடைத்துள்ளது. இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்ட முடியாமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதில் பல்வேறு இடையூறு இருந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய 433 நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் குறுவையில் 50 ஆயிரம் டன்னுடன் சேர்த்து 1 லட்சத்து 32 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப அனைத்து பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும். அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையை போக்கிட வெளி மாவட்டங்களில் இருந்து எந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் தராசு, தார்பாய், சாக்கு போன்ற உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்லை தடையின்றி கொள்முதல் செய்திட வேண்டும். வெளி மாநில, மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யாமல் தடுக்கப்பட வேண்டும்.

நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள். கொள்முதல் செய்ய நெல்லுக்கான பணத்தை நீண்ட காலம் கடத்தாமல் ஓரிரு, நாட்களில் விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயல் பாதிப்பால் சம்பா நெல் மகசூல் குறைந்துள்ளது. இதனால் அதற்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story