மரக்காணத்தில் என்ஜினீயர், விஷம் குடித்து தற்கொலை


மரக்காணத்தில் என்ஜினீயர், விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 11:04 PM GMT)

மரக்காணத்தில் ஒருதலைக்காதலால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம், 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் லோகேஸ்வரன் (வயது 26). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் லோகேஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தும், அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் லோகேஸ்வரன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். இருப்பினும் தான் காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவித்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த லோகேஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story