597 காளைகள் பங்கேற்ற கீழத்தானியம் ஜல்லிக்கட்டில் 16 பேர் காயம்


597 காளைகள் பங்கேற்ற கீழத்தானியம் ஜல்லிக்கட்டில் 16 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2 Feb 2019 8:38 PM GMT)

கீழத்தானியத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 597 காளைகள் பங்கேற்றன. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் காட்டு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிறப்பு வழிபாட்டினையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அய்யனார் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 237 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 597 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

16 பேர் காயம்

காளைகள் முட்டியதில் பார்வையாளர் இலுப்பூர் நடுப்பட்டி சேர்ந்த செல்லையா (47) உள்பட 16 பேர் காயமடைந்தார். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த செல்லையாவை மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மின் விசிறி, பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், மிக்சி, குக்கர், ரொக்க பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனியாண்டி மற்றும் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கீழத்தானியம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை அனுப்புவதில் போலீசாருக்கு 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காரையூர் போலீசார் பிடாரம்பட்டியை சேர்ந்த மலையாண்டி, திருகளப்பூரை சேர்ந்த மகேந்திரன், மேலசிவபுரியை சேர்ந்த சின்னத்துரை ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story