பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 10:30 PM GMT (Updated: 3 Feb 2019 6:04 PM GMT)

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் பிரசன்னவெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் பாண்டமங்கலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை தினந்தோறும் காலையில் பல்லக்கு உற்சவமும், மாலையில் சாமி சிம்ம, அனுமந்த ,கருட மற்றும் குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

11-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 12-ந்தேதி காலை பல்லக்கு உற்சவமும், மாலை 3 மணிக்கு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

13-ந்தேதி காலை திருமஞ்சனமும், 14-ந் தேதி மாலை புஷ்ப யாகமும், 15-ந் தேதி மாலை கருட உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேர்த்திருவிழா குழுவினர், தக்கார், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story