புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிராம மக்கள் முடிவு


புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 3 Feb 2019 11:00 PM GMT (Updated: 3 Feb 2019 7:31 PM GMT)

புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிராமமக்கள் முடிவு செய்தனர். இதற்காக வக்கீல்களிடம் மனு கொடுக்க பொதுமக்கள் கறம்பக் குடியில் திண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா கஜா புயலின் கோர தாண்டவத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். புயலினால் வீடு, விவசாயம், தொழில், கூலிவேலை, வியாபாரம் என அனைத்தையும் இழந்து பெரும்பான்மையான மக்கள் இன்னமும் தவித்து வருகின்றனர். புயலால் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில், நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த இழப்பீடு தொகை வழங்குவதில் கடும் குளறுபடி ஏற்பட்டது. வீடு, உடைமைகளை இழந்து இன்னமும் அதை சரி செய்யாமல் தவித்து வரும் பல ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. மேலும் நிவாரண தொகை கேட்டு பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து திரிந்து வருகின்றனர்.

இதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, வாழை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு காரணமாக பாரபட்சம், காட்டப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்தும் தாலுகா அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காதவர்கள் சார்பில், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் அவர்களை இணைத்து கொள்ளலாம் எனவும், கறம்பக்குடி கிராமத்தில் சட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மதுரை உயர்நீதிமன்ற மூத்த வக்கீல் ஆசைத்தம்பி தலைமையில், 13 வக்கீல்கள் நேற்று கறம்பக்குடிக்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கறம்பக்குடிக்கு திரண்டு வந்தனர். பொதுமக்களிடமிருந்து வீடு பாதிப்பு, விவசாய பாதிப்பு, கால்நடை பாதிப்பு குறித்த விவரங்களை வக்கீல்கள் மனுவாக பெற்றனர்.

அப்போது பொதுமக்களிடம் பெற்ற மனுக்களையும், ஆவண நகல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீண்டும் ஒரு முறை வழங்கி நடவடிக்கை எடுக்க கோருவதாகவும், நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உரிய தீர்வு காணப்படும் என்றும் வக்கீல்கள் உறுதி அளித்தனர். திடீரென நூற்றுக்கணக்கான கிராமமக்கள் கறம்பக்குடியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story