கரூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மரியாதை


கரூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மரியாதை
x
தினத்தந்தி 3 Feb 2019 11:00 PM GMT (Updated: 3 Feb 2019 8:08 PM GMT)

கரூரில் அண்ணா நினைவுதினத்தை யொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் அருகே வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கீதா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அண்ணாசிலை முன்பு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அண்ணாவின் திராவிட கொள்கைகளை கடைபிடித்து, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் அ.தி.மு.க.வினர் பயணித்து மக்களுக்கான வளர்ச்சி பணிகளுக்காக ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என அ.தி.மு.க.வினர் உறுதி மொழியேற்றனர்.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் பசுவை சிவசாமி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு தி.மு.க.வினர் ஊர்வலமாக கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானாவை வந்தடைந்தனர். பின்னர் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தி.மு.க.வினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக... என்பன போன்ற கோஷங்களை தி.மு.க.வினர் எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, கருணாநிதி, சட்டத்துறை இணைச்செயலாளர் மணிராஜ், நகர செயலாளர்கள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க, தி.மு.க. மற்றும் பொதுமக்கள் சார்பில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Next Story