நாகர்கோவிலில் வங்கி ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போலீஸ் விசாரணை


நாகர்கோவிலில் வங்கி ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Feb 2019 10:15 PM GMT (Updated: 3 Feb 2019 8:23 PM GMT)

நாகர்கோவிலில் வங்கி ஊழியர் வீட்டில் 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் ஈஸ்வரபுரத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 58), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், தன் மகளின் திருமணத்துக்காக நகை சேர்த்து வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று குமாரசாமி வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகையை திடீரென காணவில்லை. அதாவது 4 செயின்கள், கொலுசு, மோதிரம் மற்றும் காப்புகள் உள்ளிட்ட நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி நகையை வீட்டில் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனாலும் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. நகையை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால் அப்போது வீட்டுக்குள் மர்ம நபர்கள் நுழைந்ததற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஏன் எனில் மர்ம நபர்கள் புகுந்திருந்தால், எப்படியும் கதவு அல்லது ஜன்னலை உடைத்து தான் வீட்டுக்குள் சென்றிருக்க வேண்டும். ஆனால் வீட்டில் கதவு, ஜன்னலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த மற்ற பொருட்களும் வைத்த இடத்தில் அப்படியே இருந்தன. இப்படி இருக்க நகைகள் மட்டும் எவ்வாறு கொள்ளை போயிருக்கும்? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து குமாரசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் கடந்த சில தினங்களாக பெயிண்டிங் வேலை நடந்தது தெரியவந்தது. 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் குமாரசாமி ஆங்காங்கே எடுத்து வைத்துள்ளார். ஆனால் நகைகளை மட்டும் ஒரு பெட்டியில் வைத்து வீட்டின் அலமாரியில் பத்திரமாக வைத்துள்ளார். பெயிண்டிங் வேலை நடந்த நாட்களில் நகைகளை அவர் பார்க்கவில்லையாம். அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர், வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு தான் நகைகளை அவர் தேடியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது வீட்டில் வைத்திருந்த நகைகளை பெயிண்டிங் வேலை பார்த்தவர்களில் யாரேனும் திருடி சென்றார்களா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடிவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story