நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 10:30 PM GMT (Updated: 3 Feb 2019 8:41 PM GMT)

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக 5 குட்டிக் கப்பல்களில் 30–க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

இவர்கள் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து படகுகளை எடுத்துச்செல்லும்படி கூறி நெருங்கி வந்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து படகுகளை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி விரைந்தனர். இதனிடையே ஒரு சில படகுகளை சுற்றிவளைத்து இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி அதில் இருந்த மீனவர்களை தாக்கியதுடன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்தனராம்.

மேலும் இனிமேல் இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பது தொடர் கதையாகி வருகிறது. மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அஞ்சுகின்றனர்.

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் ராமேசுவரம் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே உடனடியாக மத்திய–மாநில அரசுகள் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story