மீன் குழம்பு கேட்ட மாமியாருடன் தகராறு 2 மகன்களை கொன்று பெண் தற்கொலை முயற்சி


மீன் குழம்பு கேட்ட மாமியாருடன் தகராறு 2 மகன்களை கொன்று பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 3 Feb 2019 10:45 PM GMT (Updated: 3 Feb 2019 8:57 PM GMT)

மீன் குழம்பு கேட்ட மாமியாருடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பெண் தனது 2 மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு (28). இவர்களுக்கு கமலேஷ் (8), யோகேஷ் (2) என்ற 2 மகன்கள் இருந்தனர். கமலேஷ் 3-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த நிலையில் அம்மு 2 மகன்களுடன் தனது மாமியார் மீனா (55) என்பவருடன் வசித்து வந்தார். நேற்று காலை மீன்குழம்பு வைத்து தருமாறு மீனா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அம்மு, நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகன்களுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலேஷ், யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அம்மு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story