மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவான தொழிலாளி கைது


மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவான தொழிலாளி கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 10:18 PM GMT (Updated: 3 Feb 2019 10:18 PM GMT)

மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த அரியராவி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்வக்குமார்(வயது 44). தொழிலாளி. இவரது மனைவி செல்வமணி (40). கடந்த 2001-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக செல்வக்குமார் செல்வமணியை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து செல்வமணியின் அண்ணன் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(45) கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடலூரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி செல்வக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து, செல்வகுமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மகளிர் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை 5 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து 2016-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையே ஜாமீனில் வந்திருந்த செல்வக்குமார், தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் கடலூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி லிங்கேஸ்வரன், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் செல்வக்குமாரை தேடி பிடிக்கும் படி போலீசுக்கு உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் பழனிசாமி, சிவக்குமார், பரசுராமன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் செல்வக்குமாரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் செல்வக்குமார் திருப்பூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வக்குமாரை கைது செய்து, பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவரை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தறைமறைவாக இருந்த செல்வக்குமார் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story