அரும்பாக்கத்தில் மனைவியின் முகத்தில் கத்தியால் குத்திய கணவர் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி


அரும்பாக்கத்தில் மனைவியின் முகத்தில் கத்தியால் குத்திய கணவர் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 4 Feb 2019 10:00 PM GMT (Updated: 4 Feb 2019 5:07 PM GMT)

அரும்பாக்கத்தில், மனைவியின் முகத்தில் கத்தியால் குத்திய கணவர், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் பயந்துபோய் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 44). இவருடைய மனைவி தேவி(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அரும்பாக்கம், தெருவீதி அம்மன் கோவில் தெருவில் தனது மகள்களுடன் தேவி, தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை தேவி வீட்டுக்கு வந்த ரமேஷ், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தேவியின் முகத்தில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த தேவி, ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், அதே கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

ரமேசுக்கு நோய் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மகளின் தேவைக்காக ரமேசின் ஆதார் அட்டையை தேவி வாங்கி வந்ததாக தெரிகிறது. நேற்று காலை அந்த ஆதார் அட்டையை திருப்பி வாங்கி செல்வதற்காக மனைவி வீட்டுக்கு குடிபோதையில் வந்த ரமேஷ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் ஆதார் அட்டையை எடுக்க தேவி வீட்டின் உள்ளே சென்றார். உடனே ரமேஷ், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மனைவி தேவியின் முகத்தில் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் பயந்துபோன ரமேஷ், தனது கையையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதால் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ரமேஷ் இவ்வாறு செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story