கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் கைது


கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 6:03 PM GMT)

கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போத்தனூர்,

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி கடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கல்லூரி மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவியை ஆசைவார்த்தை கூறி வாலிபர் ஒருவர் பழனிக்கு கடத்திச்சென்று தங்கும் விடுதியில் அடைத்து வைத்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவியையும், வாலிபரையும் போலீசார் மீட்டு கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், கோவை கணபதி பகுதியில் மாணவி வசித்து வந்தபோது அதேபகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சவுக்கத்அலி (வயது 20) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். டிரைவர் சவுக்கத்அலி திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர். குனியமுத்தூர் பகுதிக்கு மாணவி குடிவந்தபோதும், சவுக்கத்அலி அவரிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி திருப்பூர் மற்றும் பழனியில் விடுதி அறை எடுத்து தங்க வைத்து சவுக்கத்அலி பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சவுக்கத்அலி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story