விராலிமலை பஸ் நிலையத்தில் பயங்கரம்: நடத்தையில் சந்தேகத்தால் பெண் குத்திக்கொலை போலீசில் கணவர் சரண்


விராலிமலை பஸ் நிலையத்தில் பயங்கரம்: நடத்தையில் சந்தேகத்தால் பெண் குத்திக்கொலை போலீசில் கணவர் சரண்
x
தினத்தந்தி 4 Feb 2019 11:15 PM GMT (Updated: 4 Feb 2019 7:47 PM GMT)

விராலிமலை பஸ் நிலையத்தில் நடத்தையில் சந்தேகத்தால் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 36). இவர் சென்னையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (31). இவர்களுக்கு சந்தோஷ்குமார் (12), சுசீந்திரன் (11) என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் லதாவின் நடத்தையில் வேலுச்சாமி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை யடுத்து லதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடையில் லதா வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அவர் கடைக்கு தினமும் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது கடைக்கு வந்த வேலுச்சாமி, லதாவிடம் தகராறு செய்தார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாரும் எதிர்பாராதவிதமாக லதாவின் கழுத்து, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதையடுத்து லதா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் லதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதில் வேலுச்சாமியின் கையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் இது குறித்து விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேலுச்சாமி விராலிமலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். 

Next Story