மனித உரிமை மீறல் வழக்கு: ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு ஜெயில் நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


மனித உரிமை மீறல் வழக்கு: ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு ஜெயில் நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 9:30 PM GMT (Updated: 5 Feb 2019 1:45 PM GMT)

மனித உரிமை மீறல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

நெல்லை,

மனித உரிமை மீறல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்

நெல்லையை அடுத்த பாலாமடையை சேர்ந்தவர் ராமையா (வயது 70). இவர் கடந்த 2018–ம் ஆண்டு நெல்லை மனித உரிமை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். எனது பென்சன் பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறேன். நான் கடந்த 2008–ம் ஆண்டு திருட்டு நகையை வாங்கியதாக அப்போதைய பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது முகைதீன் என்பவர் என் மீது குற்றம் சாட்டினார்.

மேலும் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தி என்னிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டார். இது மனித உரிமை மீறலாகும். நான் பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தேன். எனது மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மனித உரிமையை மீறி செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், மனித உரிமை கோர்ட்டு நீதிபதியுமான ராஜசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

5 ஆண்டு ஜெயில்

தீர்ப்பில், “மனித உரிமையை மீறி செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது முகைதீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16,500 அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், அபராத தொகையில் ரூ.10 ஆயிரத்தை ராமையாவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் ராமையா தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் சிவசங்கரன் ஆஜராகி வாதாடினார். தற்போது முகமது முகைதீன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story