திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா
x
தினத்தந்தி 5 Feb 2019 10:30 PM GMT (Updated: 5 Feb 2019 7:11 PM GMT)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக் கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு ஒரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனை தரிசனம் செய்ய வந்தார். அப்போது மன்னர் வந்ததை கூட கவனிக்காத அபிராமி பட்டர் தியான நிலையில் இருந்தார். இதனை கண்ட மன்னர் அருகில் இருந்தவர்களில் இவர் யார்? என்று கேட்டார். அப்போது அபிராமி பட்டரை பற்றி அவதூறாக அருகில் இருந்தவர்கள் மன்னரிடம் கூறினர். ஆனால், சரபோஜி மன்னர், அவர்கள் சொன்னதை நம்பவில்லை. பின்னர் பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அதற்கு, அம்பிகையின் தியான நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் தவறி பவுர்ணமி என்றார். அமாவாசையை, பவுர்ணமி என்று தவறுதலாக கூறியதால் மன்னர் சினம் கொண்டார். அதனை தொடர்ந்து அபிராமி பட்டர், ‘உதிக்கின்ற செங்கதிர்‘ என்று ஆரம்பிக்கும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். இதில் 79-வது பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றினார்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வு ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை அன்று அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி நேற்று முன்தினம் தை மாத அமாவாசையையொட்டி ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடினர். அப்போது ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்யப்பட்டது. மேலும் தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய நிகழ்வு நடைபெற்றது. பின்னர் அபிராமி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அபிராமி அம்மனுக்கு தை அமாவாசையையொட்டி பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி திருக்கடையூர் ஆணைக்குளத்து கரையில் அமைந்துள்ள எதிர்காளஸ்வரர் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அங்கு அபிராமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

Next Story