திருவண்ணாமலையில் சாலைபாதுகாப்பு குறித்து வெளிநாட்டு பயணிகள் துண்டுப்பிரசுரம் வினியோகம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


திருவண்ணாமலையில் சாலைபாதுகாப்பு குறித்து வெளிநாட்டு பயணிகள் துண்டுப்பிரசுரம் வினியோகம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:45 PM GMT (Updated: 5 Feb 2019 8:29 PM GMT)

திருவண்ணாமலையில் சாலைபாதுகாப்பு குறித்து வெளிநாட்டு பயணிகள் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை,

சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் திருவண்ணமலை டவுன் போலீசார் மூலம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவண்ணாமலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து திருவண்ணாமலை நகரத்திற்கு வரும் வெளிநாட்டினர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போலீசார் மற்றும் வெளிநாட்டு பயணிகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் பூத நாராயணர் கோவிலில் இருந்த கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணமாக சின்னக்கடை வீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பஸ் நிலையம் எதிரில் பொது மக்களுக்கு வெளிநாட்டினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். வெளிநாட்டினர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது குறித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபட்ட வெளிநாட்டு பயணிகளிடம் கேட்டபோது, “இங்கு இருச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் வேகமாக செல்கின்றனர். சாலை பாதுகாப்பு விதிகளை பொரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை. ஆனால் எங்கள் நாடான ஜெர்மனியில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுபவர்கள் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும். இல்லையென்றல் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.எனவே அனைவரும் சாலை பாதுகாப்பு விதியை பின்பற்ற வேண்டும்” என்றனர்.


Next Story