சிதம்பரத்தில் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரத்தில் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:39 PM GMT (Updated: 5 Feb 2019 10:39 PM GMT)

சிதம்பரத்தில் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் மாரியப்பா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி அபிராமி (வயது 28). இவர்களுடைய மகன் அஸ்வின்(7). நேற்று முன்தினம் இரவு அபிராமி தனது மகன் அஸ்வினுடன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகில் வந்த போது, மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அபிராமியின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அபிராமி திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அபிராமி, சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story