கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது


கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது
x
தினத்தந்தி 6 Feb 2019 11:00 PM GMT (Updated: 6 Feb 2019 7:18 PM GMT)

சீர்காழியில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினர் செல்லப்பன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது 2016-17, 2017-18-ம் ஆண்டுகளுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனமும், வங்கிகளும் செய்யும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து முறைகேடாக பணம் கேட்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், நீதிசோழன், பிரபாகரன், ஜெயக்குமார், பாஸ்கர், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story