கணேஷ் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்: சட்டசபைக்கு வருகைதந்த ஆனந்த்சிங் - எம்.எல்.ஏ.க்கள் நலம் விசாரித்தனர்


கணேஷ் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்: சட்டசபைக்கு வருகைதந்த ஆனந்த்சிங் - எம்.எல்.ஏ.க்கள் நலம் விசாரித்தனர்
x
தினத்தந்தி 6 Feb 2019 8:45 PM GMT (Updated: 6 Feb 2019 8:37 PM GMT)

கணேஷ் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற ஆனந்த்சிங், சட்டசபைக்கு வருகைதந்தார். அவரிடம் எம்.எல்.ஏ.க்கள் நலம் விசாரித்தனர்.


பெங்களூரு, 

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாயகிவிட்டதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைக்கும் வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் கடந்த 18-ந்தேதி நடந்தது.

கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமநகர் அருகே உள்ள ஒரு ரெசார்ட் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு எம்.எல்.ஏ.க்கள் கணேஷ், ஆனந்த்சிங் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, பா.ஜனதாவுக்கு செல்ல இருந்ததை ஆனந்த்சிங் கூறியதாக கூறி கணேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கணேஷ், ஆனந்த்சிங்கை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 4-ந்தேதி தான் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று நடந்த கர்நாடக சட்டசபை கூட்டத்தில் ஆனந்த்சிங் கலந்துகொண்டார். அவர் சவரம் செய்யாத நிலையில் தாடியுடன், கருப்பு நிற கண்ணாடி அணிந்தபடி வந்திருந்தார்.

அவரிடம் எம்.எல்.ஏ.க்கள் நலம் விசாரித்தனர். மேலும் மந்திரி ஜமீர்அகமதுகானும் ஆனந்த்சிங்கிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சட்டசபை காங்கிரஸ் தலைவரும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையாவிடம் ஜமீர்அகமதுகான் சென்றார். பின்னர் 3 பேரும் சிறிது நேரம் பேசியபடி இருந்தனர்.


Next Story