மோடி மீண்டும் பிரதமராக முடியாது - காங்கிரஸ் பொதுக்குழுவில் பரமேஸ்வர் பேச்சு


மோடி மீண்டும் பிரதமராக முடியாது - காங்கிரஸ் பொதுக்குழுவில் பரமேஸ்வர் பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 9:30 PM GMT (Updated: 6 Feb 2019 9:06 PM GMT)

மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் பொதுக்குழுவில் பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசியதாவது:-

மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டின் ஏழை மக்கள், மோடியை மன்னிக்க மாட்டார்கள். காங்கிரசார் கட்சியை பலப்படுத்தினார், 10 மோடிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மோடி மீண்டும் பிரதமராக முடியாது.

கா்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ராகுல் காந்தியை பிரதமராக்க நிர்வாகிகள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். கிராமப்புறங்களில் மக்களுக்கு வேலை வழங்க, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை முடக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

சரக்கு-சேவை வரி திட்டத்தால், சிறு வியாபாரிகள் நஷ்டத்தில் சிக்கினர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமானவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். கருப்பு பணம் குறையும் என்று மோடி சொன்னார். ஆனால் அதுபோல் கருப்பு பணம் எதுவும் குறையவில்லை.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் மோடி ஆட்சியின் தோல்விகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் மனதை வெல்ல வேண்டும். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.


Next Story