பவானிசாகர் அருகே பயங்கரம் தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை


பவானிசாகர் அருகே பயங்கரம் தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 5:09 PM GMT)

பவானிசாகர் அருகே தலையில் கல்லைப் போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டார்.

பவானிசாகர், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் குமரன்கரடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 50). தொழிலாளி. இவருடைய மனைவி தேவி (45). இவர்களுக்கு புவனேஸ்வரி (24) என்ற மகளும், புருஷோத்தமன் (21) என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. தங்களது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கும், தேவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து தேவி குமரன்கரடு பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் அந்தப்பகுதியில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததோடு, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

நேற்று காலை தேவியின் வீடு நீண்டநேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார், தேவியின் வீட்டு கதவை திறந்து பார்த்தனர். அப்போது தலை சிதைக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் தேவி பிணமாக கிடந்தார். மேலும் அவரின் அருகே பெரிய கல்லும் கிடந்தது. அதனால் தேவியின் தலையில் கல்லைப்போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டார். மேலும் சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்தபடி அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் ஓடியது. பின்னர் அந்த இடத்தில் நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும், ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொலை நடந்த வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலையில் கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story