சாலை பாதுகாப்பு வாரவிழா: தஞ்சையில், மினி மாரத்தான் போட்டி 1,500 பேர் பங்கேற்பு


சாலை பாதுகாப்பு வாரவிழா: தஞ்சையில், மினி மாரத்தான் போட்டி 1,500 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 6:45 PM GMT)

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தஞ்சையில் நேற்று மினிமாரத்தான் போட்டி நடந்தது. இதில் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்ட காவல் துறை மற்றும் தாமரை பன்னாட்டு பள்ளி சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் தஞ்சையில் நேற்று நடந்தது. தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லுாரி மைதானத்தில் தொடங்கிய போட்டி டான்டெக்ஸ் ரவுண்டானா, ஆர்.ஆர்.நகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராமநாதன் ரவுண்டானா வழியாக தஞ்சை அரசு ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.இந்த போட்டியின் மொத்த தூரம் 10 கி.மீ. தூரம் ஆகும். இந்த போட்டியை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடந்தது.

இதில் தஞ்சை 13-வது பட்டாலியனை சேர்ந்த மணிகண்டன் முதல் பரிசும், திருவையாறு பள்ளி மாணவன் பிரகாஷ் 2-ம் இடமும், தஞ்சையை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் 3-ம் இடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் பி.வி.செல்வராஜ் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஈசாஸ்ரீ, கோடீஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

இறுதியாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3,500, 3-வது பரிசாக ரூ.2,500-ம் வழங்கப்பட்டன. மேலும் ஆறுதல் பரிசு பெற்ற 10 பேருக்கு ஹெல்மெட் பரிசாக வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Next Story