எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார் முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்


எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார் முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:30 PM GMT (Updated: 9 Feb 2019 10:25 PM GMT)

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என கருத்து கூறிய அசோக் சவான், எதிர்க்கட்சி வரிசையில் அமர அவசரப்படுவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளும், 48 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் மராட்டியம் ஆகும்.

மராட்டிய சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் தான் நடைபெற வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக சமீப காலமாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

அவுரங்காபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஜனசங்கர்ஷ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான், இந்த மாதம் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும். மராட்டிய சட்டசபை கலைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தேர்தலையும் ஒரே நேரத்தில் சந்திக்க தயாராகுமாறு கட்சி தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் நவாப் மாலிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்த கருத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டலடிக்கும் வகையில் பதில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர அசோக் சவான் அவசரப்படுகிறார். நாங்கள் தேர்தலை அதற்குரிய நேரத்தில் தான் நடத்துவோம். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இல்லை என்று தேேவந்திர பட்னாவிஸ் கூறினார்.

Next Story