இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் புதுச்சேரியில் நாளை முதல் அமல்


இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் புதுச்சேரியில் நாளை முதல் அமல்
x
தினத்தந்தி 9 Feb 2019 11:45 PM GMT (Updated: 9 Feb 2019 11:23 PM GMT)

விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அப்போது இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடம் படிப்படியாக அறிவுறுத்தி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கடந்த 6 மாதமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை கவனித்து வருகிறோம். அவர்கள் ஹெல்மெட் அணிய தயங்குகின்றனர். ஹெல்மெட் அணிவதில்தான் வாழ்க்கையே உள்ளது.

ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக எப்.எம். மூலம் பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 322 பேர் ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழந்துள்ளனர்.

எனவே ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத் துவதற்கான நாள் வந்து விட்டது. தொடர்ந்து ஹெல்மெட் அணியவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கை சந்திக்க வேண்டியதிருக்கும்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். இந்த திட்டத்தை திடீரென்று அறிவிக்கவில்லை. குழு அமைத்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரே நடைமுறைப்படுத்த உள்ளோம்.

இதனை அமல்படுத்தவில்லை என்றால் சாலை விபத்துகளில் தொடர்ந்து சாவு இருந்துகொண்டே இருக்கும். வாரம் ஒரு இளைஞர் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி பலியாகிறார். இதை தடுக்கவேண்டும்.

புதுச்சேரியில் கடந்த வாரம் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,536 பேருக்கு அபராதம் விதித்துள்ளோம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார்.

பேட்டியின்போது போக்குவரத்து துறை செயலாளர் சரண், ஆணையர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story