மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் உள்பட 2 பேர் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 6:15 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலை கல்படையை சேர்ந்தவர் ராமர் மகன் விக்ரம்(வயது 19). இவருடைய சித்தப்பா பெரம்பலூர் மாவட்டம் வீரகனூர் பொன்னிநகரை சேர்ந்தவர் வேல்முருகன் (37). இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தில் நடைபெற இருந்த உறவினர் இல்ல விழாவுக்காக வேல்முருகன் நேற்று முன்தினம் வந்திருந்தார். அதேபோல் விக்ரமனும் அங்கு வந்திருந்தார்.

பின்னர் நள்ளிரவில் வேல்முருகனும், விக்ரமனும் ஒரு மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை விக்ரம் ஓட்டினார்.

அப்போது நள்ளிரவில் நீலமங்கலம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென விக்ரமின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் விக்ரம், வேல்முருகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story