சேலம் பொன்னம்மாபேட்டையில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை 4-வது முறை முயன்றபோது உயிரிழந்தார்


சேலம் பொன்னம்மாபேட்டையில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை 4-வது முறை முயன்றபோது உயிரிழந்தார்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:00 PM GMT (Updated: 11 Feb 2019 6:00 PM GMT)

சேலம் பொன்னம்மாபேட்டையில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் 4-வது முறையாக தற்கொலை முயற்சி மேற்கொண்ட போது உயிரிழந்தார்.

சேலம், 

சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 28). எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே மோகன்ராஜ் குடித்துவிட்டால் சில நேரங்களில் கை, கால்களில் பிளேடால் கிழித்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன்ராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வந்ததை பார்த்த குடும்பத்தினர் மோகன்ராஜை கண்டித்துள்ளனர். இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறிது நேரத்திற்கு பின்பு வீட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் திறக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ஜன்னலை திறந்து அவர்கள் பார்த்தபோது, வீட்டுக்குள் மோகன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் உடனடியாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மோகன்ராஜை கீழே இறக்கி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மோகன்ராஜ் ஏற்கனவே 3 முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டதும், 4-வது முறையாக தற்கொலை முயற்சி மேற்கொண்ட போது உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story