திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை: போலீஸ் தேடிய கார் உரிமையாளர் கைது


திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை: போலீஸ் தேடிய கார் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 6:45 PM GMT)

திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் துண்டிவிநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் திருபுவனம் பகுதி பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் ஆவார். இவரை கடந்த 5-ந் தேதி இரவு ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம்சுந்தர் திருவிடைமருதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடினர். இந்த வழக்கில் கடந்த 7-ந் தேதி 5 பேர், 9-ந் தேதி 3 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொலை சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு காரில் வந்து, ராமலிங்கத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. அந்த காரின் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதில் கார் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்த முகமது இப்ராகீம் (வயது47) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது இப்ராகீமை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட முகமது இப்ராகீமை, கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். முன்னதாக அவருக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரை நீதிபதி சண்முகப்பிரியா வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story